பல்சுவை உணவகம்

Blogger Widgets

27 அக்டோபர், 2012

நான் படித்தது 7

மெல்லச் சாகும் கங்கை… புனித நதியில் புற்று நோய் கனிமங்கள்!

இந்தியாவின் புனிதநதியாக போற்றப்படும் கங்கையில் தொழிற்சாலை கழிவுகளும், இறந்தவர்களின் உடல்களும் மிதக்கின்றன. காங்கையை தூய்மையான நதியாக மாற்ற எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டும் நாளுக்கு நாள் கங்கை நதி மாசடைந்துதான் வருகிறது.

மாசடைந்து வரும் கங்கை:
கங்கையில் இறந்தாலோ அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

கலக்கும் தொழிற்சாலை கழிவுகள்:
சல சலத்து ஒடும் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கின்றன. இதனால் கங்கையின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புனிதம் தேடி செல்லும் மக்கள் புற்றுநோய்க்கு இரையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதுதான் வேதனை.

கங்கையில் புற்றுநோய் காரணிகள்:
கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்க மக்கள்:
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன. கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கங்கையை காக்க உயிர்துறந்த சாது:
கங்கையின் புனிதம் காப்பதற்காகவே உயிர்துறந்தவர் சுவாமி நிகமானந்தா. உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா, மத்ரி சதான் ஆசிரமத்தை சேர்ந்தவர். கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி ஜூன் மாதம் 15ம் தேதி உயிரிழந்தார்.

புனித கங்கை உயிர்பெறுமா?:
கங்கை நதியின் புனிதம் காக்க கடந்த 1985ம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி காலம் முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் தண்ணீராய் செலவழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கங்கை மாசுபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. கங்கையை காக்க பலரும் அறிவுறுத்தியும் சரியான நடவடிக்கை எடுக்காமல் திணறுகின்றன மத்திய மாநில அரசுகள். இதனால் பலரின் பாவத்தை கழுவிய கங்கை நதி பாவமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

புனித கங்கையை உயிர்பிக்க இந்த அரசுகள் ஏதாவது செய்யப்போகின்றனவா அல்லது கங்கை மெல்ல மடிவதை அனுமதிக்கப்போகின்றனரா என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்வி.

நான் படித்தது 6

அக்டோபர் 16
ஆம்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள், இந்நாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாறை நினைவு கூறுவோம்...


1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். 

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

நான் படித்தது 5


இந்தியாவில் உள்ள புகழ்ப்பெற்ற குகைக்கோயில்கள்...

இந்தியா என்றாலே அனைவருக்கும் பண்பாடு, கலாச்சாரம் தான் நினைவுக்கு வரும். அத்தகைய இந்தியா சிற்பக்கலையிலும் மிகவும் சிறந்தது. அதனால் இன்றும் நிறைய மக்கள் இந்தியாவிற்கு வந்து அத்தகைய இடங்களை பார்ப்பதற்கு பல நாடுகளிலிருந்தும் வருகின்றனர்.

மேலும் இங்கு பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் நிறைய உள்ளன. அத்தகைய கோயில்களில் உள்ள சிற்பங
்கள் அனைத்துமே, இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நன்கு வெளிப்படுத்தும்.

அவ்வாறு வெளிப்படுத்தும் கோயில்களில் குகைக்கோயில்கள் சிலவற்றை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அது நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தளமாக உள்ளது.

மேலும் குகைக்கோயில்கள் என்றாலே அது பாறைகளால் ஆனது என்பது நன்கு தெரியும். அதிலும் அந்த கோயில்களில், ஒரு கோயிலை எடுத்தாலே அதில் பல அடுக்குகள் இருக்கும். அதனைப் பார்க்கும் போது, எவ்வாறு தான் அதனை வடிவமைத்தார்களோ என்று நம்மை சிந்திக்கும் வகையிலும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

மேலும் சில கோயில்களில் நுழைந்தால், எப்படி வெளியே வருவது என்று கூட தெரியாது. அந்த அளவில் சில குகைக்கோயில்களின் அமைப்புகள் இருக்கும்.

இப்போது அந்த மாதிரியான குகைக்கோயில்களில் நம் பாரம்பரியத் தளமாக இருக்கும் குகைக்கோயில்களுள் ஒரு சிலவற்றைப் பற்றியும், அது எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போமா!!!

எல்லோரா குகைகள்:
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சரநந்திரி மலையில் 30-க்கும் மேற்பட்ட குகைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த எல்லோரா குகைகள் மஹாராஸ்ட்ராவில் அமைந்துள்ளன. இதனை இந்து, ஜெயின் மற்றும் புத்த மதத்திற்காக அர்பணிக்கப்பட்டுள்ளன. இது ஒரு உலக பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது.

அஜந்தா குகைகள்:
இந்த குகையும் மஹாராஸ்ட்ராவில் உள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினர் (UNESCO) உலக பாரம்பரிய தளமாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அஜந்தா பாறை வெட்டுக் குகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உருவாக்கத் தொடங்கியது.

உதயகிரி குகைகள்:
மத்திய பிரதேசத்தில் உள்ள உதயகிரி குகைகளின் பாறை வெட்டுக்கள், குப்தப் பேரரசின் ஆட்சி காலத்தில் இரண்டாம் சந்திர குப்த பேரரசரால் கட்டப்பட்டது. அதிலும் இந்த குகைகள் கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டது.

எலிபண்டா குகைகள்:
மும்பை துறைமுகப் பகுதியில் உள்ள தீவில் அமைந்துள்ள எலிபண்டா குகைகள், இந்து மற்றும் புத்த மதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் அனைத்தும் 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது

அமர்நாத் குகைக்கோயில்:
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் கோயில் கடவுள் சிவனுக்காக, 3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு இங்கு ஐஸ்கட்டியால் ஆன சிவ லிங்கம் இருப்பதேயாகும். இந்த அமர்நாத் குகைக்கோயில் சிறந்த சிவ ஸ்தளங்களில் ஒன்று.

படலீஸ்சுவரர் குகைக்கோயில்:
பூனாவில் உள்ள படலீஸ்சுவரர் குகைக்கோயில் ஒரே ஒரு பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த இந்து குகைக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

வராகா குகைக்கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள இந்த வராகா குகைக்கோயில் 7 ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்து, ஒரே மாதிரியாக இருந்து வரும் ஒரு வெட்டுப்பாறை. இந்த குகைக்கோயிலில் நான்கு தூண்கள் இருப்பதோடு, இது இந்து கடவுளான விஷ்ணு மற்றும் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner